Saturday, March 7, 2026
Home > கவிதை > மன்னித்துவிடு… இல்லையேல் தண்டித்துவிடு… – #கவிதை

மன்னித்துவிடு… இல்லையேல் தண்டித்துவிடு… – #கவிதை

ஒரு ஆண் செய்யும் பெரும்பாவம்,

ஒரு பெண்ணின் கண்களில் கண்ணீர் சிந்த வைப்பது…

அந்தப் படுபாவத்தை நான் செய்துவிட்டேன்…

என் மனசாட்சி என்னை மன்னிக்கவில்லை…

அவள்…

எந்தத் தவறும் செய்யவில்லை…

என் மீது குற்றமிருந்தும், எந்தக் குற்றமும் சுமத்தவில்லை…

நான் செய்த தவறைப் பற்றி, அவள் யாரிடமும் மூச்சே விடவில்லை…

அதற்காகவே தான் நான் அவளை தண்டித்தேனா?

என் வார்த்தைகள், அவள் நெஞ்சை எவ்வளவுக் காயப்படுத்தியிருக்கும்…

என் கோபம், அவளை எவ்வளவு வாட்டியிருக்கும்…

எனது அவசர முடிவு, அவளை எவ்வளவு வருத்தியிருக்கும்…

தவறேதும் செய்திராத ஒரு பெண்ணை தண்டித்துவிட்டேனே…

என்னை நம்பியவளிடம், என் அதிகார வரம்பை மீறிவிட்டேனே…

வலிமையான நிலையில் நான், எளிமையான நிலையிருப்பவளை, மனிதத்தை மீறி மிரட்டிவிட்டேனே…

ஆண் என்ற ஆணவத்தை, அவளிடம் காட்டிவிட்டேனே…

அவள் வெறும் ஒரு பெண் என் என் செயலால், அவளை சிறுமைப்படுத்திவிட்டேனே…

ஆணதிக்கத்தை நிலைநாட்ட துடித்துவிட்டேனே…

பெண்ணடிமைத்தனத்தை நிறுவ முயன்றுவிட்டேனே…

பாவ மன்னிப்பே கிடையாது என் செயலுக்கு…

என்ன கைமாறு செய்யப்போகிறேன், அந்தப் பெண்ணின் கண்ணீருக்கு…

அவளுக்கு, நான் இழைத்துவிட்டேனே அநீதி…

ஆதலால், நான் தொலைத்து நிற்கிறேன், என் மன நிம்மதி…

பெண்ணே….

உனக்கு மனமிருந்தால்…

பாவியான என்னை மன்னித்துவிடு…

இல்லையேல்…

சினம் இன்னுமிருந்தால்…

ஈவு இரக்கமின்றி என்னை தண்டித்துவிடு…

 .கா.

அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை

மார்ச் 21, 2020

மதியம் 02:46 மணி…