Friday, April 26, 2024
Home > ஒண்ணுமில்ல > ஒண்ணுமில்ல… பகுதி 24

ஒண்ணுமில்ல… பகுதி 24

இருபத்தி முன்றாவது பகுதியின் லிங்க்…

அறைக்குள் நுழைந்தவுடன் கதவைப் பூட்டிக்கொண்டேன்.

********************

என் உடலெல்லாம் நடுங்கியது. இன்றைய நாள் ஏன் எனக்கு இவ்வளவு மோசமானதாக இருக்கிறது. பெண்ணாய் பிறந்தது என் தவறா? எல்லா ஆண்களும் ஏன் பெண்ணை ஏதோ நுகரும் பண்டமாகவே பார்க்கிறார்கள். இங்கே உண்மையான அன்பு பெண்களுக்கு கிடைக்காமலே போகிறதே. என்ன உலகம் இது.

இங்கே பெண் சம்மதம் சொல்லும் வரை, பெண்ணுக்காக ஒரு ஆண் தலைகீழாக நிற்கிறான், விட்டால் தண்ணீரில் கூட நடப்பான். ஆனால், அதே பெண் சம்மதம் சொல்லிவிட்டால், அவளை அவன் தன் அசையா சொத்தாக பாவித்து நடத்துகிறான். பெண்ணுக்கான பல முடிவுகளைக்கூட ஆண்களே இந்தச் சமூகத்தில் எடுத்துவிடுகிறார்கள். அது அப்பாவாக இருக்கலாம், கணவனாக இருக்கலாம், அண்ணானக இருக்கலாம், தம்பியாகக் கூட இருக்கலாம். இல்லை, வேறு எந்த ஆணாகக் கூட இருக்கலாம். பல கோடிப் பெண்கள் இப்படித்தான் அசையா சொத்தாக, நடைப்பினமாக இருக்கிறார்கள். நான் பெண்ணாக ஏன் பிறந்தேன் என்று என்றைக்குமே வருத்தப்பட்டது கிடையாது. ஆனால், இன்று என்னை வருத்தப்பட வைத்துவிட்டார்கள்.

******************

நான் நேராக குளியலரைக்குச் சென்றேன். என் உடல் சூடாக இருந்தது. குளித்தால் கொஞ்சம் பரவாயில்லையாக இருக்கும் என்று தோன்றியது. அதனால், என் உடைகளைக் கூட அகற்றாமல், அப்படியே உடைகளோடே, சவரை திறந்துவிட்டு, அப்படியே தரையில் அமர்ந்துக்கொண்டேன்.

என் கண்களில் தண்ணீர் தாரைத் தாரையாக கொட்டியது. சவரில் இருந்து வரும் தண்ணீரை விட என் கண்களில் அதிக தண்ணீர் சுரந்திருக்கும். நான் மிகவும் பலகினமாக இருந்தேன். எவ்வளவு நேரம் கண்ணீரிலும், தண்ணீரிலும் இருந்தேன் என்றே தெரியவில்லை. எழுந்துப் போகவும் மனமில்லை. அரை மணி நேரமாவாது அப்படியே பாத்ரூம் தரையில் அமர்ந்திருந்தேன்.

அப்போது சட்டென்று தேவாவின் நினைவு வந்தது. தேவையில்லாமல் அவனை வேறு அடித்துவிட்டேன். இந்த உலகிலுள்ள ஆண்கள் மீது நான் கொண்டிருந்த எல்லா கோபத்தையும் அவன் மீது இறக்கிவிட்டேன். நான் அடித்ததில் என் செருப்போ பிய்ந்துவிட்டது. பாவம் அவன், வலியால் எவ்வளவு துடித்திருப்பானோ, நான் அடித்ததில் என் செருப்பு ஹீல் பட்டு அவன் தலையில் இரத்தம் வேறு வந்ததே, அது என் முகத்தில் பட்ட அதிர்ச்சியில் தான் நான் அவனை அடிப்பதையே நிறுத்தினேன்.

அவன், நான் அடிப்பதை தடுக்க நினைத்தானோ தவிர, என்னை திருப்பி அடிக்க முயலவில்லை. ஏன் அவன் என்னை திருப்பி அடிக்கவில்லை. அவனின் உடல் பலத்திற்கு, அவன் ஒரு அறை விட்டிருந்தால், நான் அங்கேயே சுருண்டு விழுந்திருப்பேனே. அவன் பார்க்க கொஞ்சம் ஃபிட்டான ஆள் மாதிரி தான் இருந்தான்.

காலையில் என்னை அவன் இரயில் பார்த்தப் பொழுது அவன் கண்களைக் கண்டேன். அதில் ஏதோ சோகம் இருந்ததை என்னால் உணர முடிந்தது. நான் தவறு செய்துவிட்டேன் என்று, என் மனம் சொல்லியது. அவனைக் கண்டுபிடித்து, மன்னிப்பு கேட்க வேண்டும் என்று என் மனம் சொல்லியது. அவன் என்னை மன்னிப்பானா? என்று எனக்குள் கேள்வி எழுந்தது. நான் செய்த தவறு என்னை மேலும் வருத்தமடையச் செய்தது.

பாத்ரூம் தரையிலிருந்து எழுந்தேன். என் ஈர உடைகளைக் களைந்தேன். புதிய உடையை மாற்றிக்கொண்டேன். அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை.

என் போனை எடுத்துப் பார்த்தேன். சூசன் என்னை 10 முறை தொடர்புக்கொள்ள முயன்றிருக்கிறார்.

“பிளிஸ் கால் மீ பேக்” என்று குறுச்செய்தி அனுப்பியிருந்தார்.

நான் சூசனை அழைத்தேன், அவர் அழைப்பை எடுத்தவுடன், ஏன் இவ்வளவு நேரமாக என் அழைப்பை எடுக்கவில்லை என்று கடிந்துக்கொண்டார். நான் இன்று மதியம் இரயில் நிலையத்திலிருந்து அவர் சொன்ன வேலையை சரியாக செய்திருக்கிறேன் என்று நன்றி சொன்னார்.

“கிளையன்ட்ஸ் ஆர் வேரி ஹேப்பி, அவர் டிப்பளாய்மெண்ட் இஸ் எ கிரேட் சக்சஸ். ஐ ஹவ் ஒன் மோர் குட் நீயூஸ் பார் யூ.” என்று என் பொடிவைத்துப் பேசினார்.

நான் இருந்த மனநிலையில் அது என்னவென்று கேட்கக் கூட எனக்குத் தோன்றவில்லை. சூசன் என்ன சொல்லிக்கொண்டிருக்கிறார் என்றுக் கூட நான் சரியாக கவனிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

கடைசியாக அந்த விசயத்திற்கு வந்தார். அது என்னவென்றால்.

இருபத்திஐந்தாவது பகுதியின் லிங்க்…

– மீண்டும் சந்திப்போம் நாளை இரவு 08.00 மணிக்கு…

எழுத்து – பட்டிக்காடு