Friday, April 26, 2024
Home > ஒண்ணுமில்ல > ஒண்ணுமில்ல… பகுதி 15

ஒண்ணுமில்ல… பகுதி 15

பதினான்காவது பகுதியின் லிங்க்…

யாரோ என்னையே பார்ப்பது போன்ற உணர்வு, எல்லா பெண்களுக்கும் ஏற்படுவதைப் போல எனக்குள்ளும் ஏற்பட்டது.

நான் சுற்றும் முற்றும் பார்த்தேன். ஒருவன் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவனுக்கு வயது எப்படியும் 30ற்குள் தான் இருக்கும். பார்க்க ஒல்லியாகவுமில்லை, குண்டாகவுமில்லை. கொஞ்ச வாட்ட சாட்டமான ஆளாகத் தெரிந்தான். கொஞ்சம் அழகாகவும் இருந்தான். அவன் முகத்தில் இருந்த சிரிப்பு என்னைக் கவர்ந்தது. ஆனால் நான் அதனை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

இவன் உள்ளூர் ஆள் மாதிரி தெரியவில்லை. வேலைக்குப் போகிறவன் போன்று இவன் இல்லை. எல்லோரும் அவர்களது மொபைலில் ஆர்வமாக இருந்ததால், இவன் வேடிக்கைப் பார்ப்பதில் ஆர்வமாக இருக்கிறான். கொஞ்சம் வெளிர் நிற சட்டையும், பூளு ஜீன்ஸும் அணிந்து, சட்டையை இன் செய்து இருந்தான். ஒரு வேளை எங்கேனும் இண்டர்வீயூவிற்கு செல்கிறவன் போல என்று நினைத்தான். ஆனால், கையில் பையுமில்லை, ஃபைலுமில்லை. ஆக நிச்சயம் இவன் ஊர் சுற்றிப் பார்க்க வந்த ஆசாமி தான்.

அவன் என்னைப் பார்த்தால் பார்த்துவிட்டுப் போகட்டும் என்று நான் என் பிரச்சனைகளை சிந்தித்து அதனுள் முழ்க ஆரம்பித்தேன்.

****************************************

நான் வேலை செய்த ஆபீஸிற்கு வருவதற்கும் எனக்கு பிடிக்கவில்லை. அங்கே வந்தால், ராபினுடன் சுற்றிய நினைவுகள் என்னை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. அதனால், என்னவோ அங்கே மீண்டும் வேலையை தொடர எனக்கு விருப்பமில்லை.

நான் வேலை செய்யும் நிறுவனத்திற்கு அந்தோரி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகில் ஒரு கிளை அலுவலகம் இருக்கிறது. நான் இப்போது வேலைப் பார்க்கும் அலுவலகத்தை இன்னும் சில வருடங்களில் முடிவிட்டு அங்கேயே மொத்தமாக மாறுதலாகிப் போக வேலை நடத்துக்கொண்டிருந்தது. எனக்கு இப்போதே அங்கே மாற்றலாகி செல்லலாம் என்று தோன்றியது.

அதுவும் இப்போது நான் இருக்கும் பிராஜெக்டிலேயே பல டீம் மெம்பர்ஸ் அந்த அலுவலகத்தில் வேலைப் பார்ப்பது எனக்கு கொஞ்சம் அனுகூலமாக இருந்தது. நான் என் பிராஜெட் மேனேஜர் சூசன் மேடத்திடம், இடம் மாறுதலைப் பற்றிப் பேசினேன். முதலில் அவர் அங்கு என்னை அனுப்ப விரும்பவில்லை. அவருடைய டீமில் நான் மிக முக்கியமான ஆளாக இருந்தேன். அதனால், கொஞ்சம் சிரத்தை எடுத்து ஏன் இடம் மாற விரும்புகிறாய் என்று சூசன் கேட்டார். நான் ராபினைப் பிரிந்த கதையையும், இங்கு வருவதால் அந்த நியாபகங்கள் என்னை ஆக்கிரமித்து வருத்தமடைய வைக்கிறது என்று உண்மையைச் சொன்னேன்.

அவர் எனது மாற்றலுக்கு உடனே அனுமதி அளிக்கக் கோரி, ஹெச்.ஆருக்கு சிபாரிசு மெயில் அனுப்பினார். அதுவரை வீட்டில் இருந்தே வேலை செய்வதற்கு எனக்கு அனுமதியளித்தார் சூசன்.

எனக்கு என்னவோ அவர்களை கட்டிப்பிடித்து நன்றி சொல்ல தோன்றியது. அவரிடம் உங்களை கட்டியனைக்கவா? என்று கேட்டேன். சூசன் மறுப்பேதும் சொல்லவில்லை. நான் சூசனை கட்டியனைத்து நன்றி தெரிவித்தேன். என்னையறியாமல் என் கண்களில் கண்ணீர் பெருக்கொடுத்தது. சூசன் என்னை ஆறுதல் படுத்தி அனுப்பிவைத்தார். இது நடந்தது நான் ராபினைப் பிரிந்த சில நாட்களில். ராபினைப் பிரிந்த அடுத்த நாளே நான் வேலைக்கு வந்துவிட்டேன்.

நான் ராபினைப் பிரிந்த செய்தி எல்லோருக்கும் தெரிந்திருந்தது. எல்லோரும் என்னையே பார்ப்பதைப் போன்று ஒரு பீல் எனக்குள் ஏற்பட்டது. என் நண்பர்களும் என்னை கொஞ்சம் அக்கறை எடுத்துப் பார்த்துக்கொண்டது எனக்கு பிடிக்கவில்லை. அந்த சுழ்நிலையில் என்னை நெடுநாள் மருத்துவமனையில் இருந்து வந்த நோயாளியைப் போல நடத்தினார்கள். அது என்னை மேலும் கடுப்பேற்றியது. அதனால் அதிகமாக குடிக்க ஆரம்பித்தேன்.

இது தான் சமயம் என்று பலர் என்னிடம் வந்து, தங்களது காதலை சொல்லியிருக்கிறார்கள். சிலரோ, “ஷல் வி கோ பார் எ டேட் அண்ட் ஹவ் கேசுவல் செக்ஸ்”  என்று நேரடியாகவே கேட்டனர். என்னை எல்லோரும் எளிதாக எடுத்துக்கொண்டது என்னை சோர்வடையச் செய்தது.

“ஏண்டா. ஒரு பொண்ணுக்காக இப்படியாட அலைவீங்க” என்று ஆண் சமூகம் மேலேயே எனக்கு வெறுப்பு வந்தது. எனக்கு யாரையும் பிடிக்கவில்லை. எதிலும் நாட்டமில்லை. மேலும் மீண்டும் இன்னோரு உறவிற்குள் நான் உடனடியாக செல்ல விரும்பவில்லை. அதனால் தான் இடமாற்றலைத் தேர்ந்தேடுத்தேன்.

*****************************************

அவன் எப்போதும் என்னையே பார்த்துக் கொண்டிருக்கவில்லை. ஆனால், அவ்வப்போது என்னைப் பார்க்கிறான். ஒரு முறை நான் அவனைப் பார்ப்பதை அவன் பார்த்துவிட்டான். மெலிதாக சிரித்தான். எனக்கு என்னவோ போல இருந்தது. கொஞ்சம் பதற்றம் தொற்றிக்கொண்டது. மனம் படபடுத்தது.

நான் கூலர்ஸை எடுத்தும் மாட்டிக்கொண்டேன். என் பச்சை நிற சல்வாரையும், என் லெக்கினையும் சரி செய்துக்கொண்டேன். என் ஐடி கார்டு சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டேன்.

ராபினைப் பிரிந்த சில வாரங்களாக, அதிகமாக குடித்ததில் கொஞ்சம் தொப்பை பெரிதாகிவிட்டது. அதனை சற்றே மறைத்துக்கொள்ள தடுமாறினேன்.

அவன் என்னைப் பார்த்தால் பார்த்துவிட்டு போகட்டுமே. தினமும் ஒரு பெண் வெளியில் வந்தால் ஆயிரம் கண்கள் அவள் மீது அலைப்பாயும் தான். அதற்காக அந்தப் பெண் எல்லோருக்கும் நன்றாக தெரியவேண்டும் என்று மெனக்கெடத் தேவையில்லை. அவள் அவளாக இருந்தாலே போது, கொஞ்சம் மெனக்கெட்டால் கூட அதை ஆண்கள் சமிக்கையாக எடுத்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அதனால் பெண்கள் எப்போதும் அவர்களாகவே இருக்க வேண்டும். ஆனால், நான் ஏன் அவன் என்னைப் பார்ப்பதால் தடுமாறுகிறேன் என்று எனக்கே வியப்பாக இருந்தது.

ஆனால், இவன் என்னைப் பார்ப்பதில் காமம் இல்லை. அது அவன் கண்களிலே தெரிந்தது. கொஞ்சம் நல்லவன் போல தான் தெரிந்தான். ராபினைப் பிரிந்தப் பிறகு நான் ஏறெடுத்துப் பார்த்த முதல் ஆண்மகன் அவன் தான்.

நான் கூலர்ஸ் போட்டுக்கொண்டதில் ஒரு சவுகரியம். நான் அவனைப் பார்ப்பது எனக்கு மட்டுமே தெரியும் அவனுக்குத் தெரியாது. அவன் அவ்வப்போது என்னைப் பார்ப்பான். நான் என் மனதிற்குள் வெட்கப்பட்டு சிரித்துக்கொள்வேன். அது ஒரு செம பீல்.

பெண்ணாக பிறந்தவளுக்கு மட்டுமே அந்த உணர்ச்சியின் வீரியம் புரியும். பெண்கள் தன்னை ரசிக்கும் ஆண்மகன்களில் எவரேனும் ஒரு சிலரை மட்டுமே திரும்பிப் பார்பார்கள்.

நான் அப்படிப் பார்த்ததில் இவனும் ஒருவன். எனக்கு அவனைப் பற்றி தெரிந்துக்கொள்ள ஆர்வம் அதிகமானது.

ஆனால் அதற்குள்…

பதினாறாவது பகுதியின் லிங்க்…

– மீண்டும் சந்திப்போம் நாளை இரவு 08.00 மணிக்கு…

எழுத்து – பட்டிக்காடு