Saturday, April 20, 2024
Home > கவிதை > வலிதீர வழியுண்டோ… – #கவிதை

வலிதீர வழியுண்டோ… – #கவிதை

காற்றில்லாமல் புயல் வருவதுண்டோ…

மேகங்கள் இல்லாத மழையுண்டோ…

இருளில்லாத இடத்தில் ஒளி தேவையுண்டோ…

பறவைகளில்லாத வனமுண்டோ…

மீன்களில்லாத கடலுண்டோ…

இலையில்லாத மரமுண்டோ…

அனுயில்லாத உயிருண்டோ…

கனவில்லாத உறக்கமுண்டோ…

கண்ணீரில்லாத அழுகையுண்டோ…

வார்த்தைகளில்லாத கோபமுண்டோ…

 

ஆண்மையில்லாத பெண்மையுண்டோ…

பெண்மையில்லாத ஆண்மையுண்டோ…

காதலில்லாத பெண் மனமுண்டோ…

வலியினை மறைக்காத ஆண் மனமுண்டோ…

காமமில்லாத காதலுண்டோ…

மோகமில்லாத ஆணுண்டோ…

ஆசையில்லாத பெண்ணுண்டோ…

முத்தமில்லாத கலவியுண்டோ…

பெண்ணைத் தேடிச் செல்லாத ஆணுண்டோ…

ஆணுக்காக காத்திருக்காத பெண்ணுண்டோ…

கன்னிகழியாமல் குழந்தைப் பிறப்பதுண்டோ…

வலியில்லாமல் தாய்மையுண்டோ…

 

தனிமையில்லாத வலியுண்டோ…

காயமில்லாத காதல் தோல்வியுண்டோ…

எனக்காக அவள் வர வாய்ப்புண்டோ…

என் வலி தீர வழியுண்டோ….

 

பெண்ணே…

இன்னும் நம் காதல் தோற்கவில்லை…

ஆதலால்…

இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்…

நீ என்னைத் தேடி வருவாயென…

நாம் ஒன்று சேர்வோமென…

இனி எல்லாம் உன் கையில்…

காத்திருக்கிறேன் அந்த நம்பிக்கையில்…

 

 .கா.

அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை

நவம்பர் 02, 2020.

காலை 09.11 மணி…