Friday, April 19, 2024
Home > ஒண்ணுமில்ல > ஒண்ணுமில்ல… பகுதி 40

ஒண்ணுமில்ல… பகுதி 40

முப்பத்தி ஒன்பதாவது பகுதியின் லிங்க்…

எங்கோ ஆரம்பித்த நினைப்பு, எங்கெங்கோ பயணிக்கிறதே என்று யோசித்துக்கொண்டிருந்த வேளையில் ஒருவன் இன்ஸ்பெக்டர் அறையிலே வந்தமர்ந்தான்.

அவன் வந்தமர்ந்த தோரனையே எனக்கு காட்டிக்கொடுத்துவிட்டது இவன் தான் முக்கியமானவன் என்று. சில நிமிடங்களிலேயே என் பேத்தியும் அங்கே வந்தாள். அப்போது அங்கே நடந்ததை முழுமையாக உள் வாங்கிக் கொண்டேன். என் பேத்திக்கும் அந்த இன்ஸ்பெக்டருக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்தது. என் பேத்தியின் மேல் தவறில்லை என்று எனக்குப் புரிந்தது. என் பேத்தி தான் இங்கே பாதிக்கப்பட்டிருக்கிறாள். அவளுக்காக நீதியை நான் பெற்றுத் தரவில்லை எனில், என் ராணியம்மாவிற்கு நான் செய்துக் கொடுத்த சத்தியம் பொய்த்ததுப் போலாகிவிடும்.

என் பேத்தி கொடுத்த புகாரை வாபஸ் வாங்கச் சொல்லி அந்த இன்ஸ்பெக்டர் என்னையும் என் வயதையும் வைத்து என் பேத்தியை மிரட்டிக்கொண்டிருந்தார். உண்மையில் அந்த இன்ஸ்பெக்டர் மிரட்டும் தோணியில் என் பேத்தியிடன் கெஞ்சிக்கொண்டிருந்தார்.

“என் பேத்தி, அவ புகார வாபஸ் வாங்க மாட்டா” என்று இந்தியில் கனீரென்றுச் சொன்னேன்.

நான் சொன்னதில் புதியதாக வந்தமர்ந்தவன் கொஞ்சம் பயந்துப் போய்விட்டான். அவனை திருப்திப்படுத்த அந்த இன்ஸ்பெக்டர் என்னை கண்ணத்தில் அறைந்தார். எனக்கு கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்துவிட்டது.

அதற்குள் என் பேத்தி, அந்த இன்ஸ்பெக்டரிடம் மீண்டும் சண்டைக்குப் போய்விட்டாள். உள்ளுக்குள் எனக்கு ஆனந்தமாக இருந்தது, எனக்கு ஏதேனும் ஒன்று என்றால், என் தேவி, எப்படி பதறிப்போகிறாள் என்று கண்கூடப் பார்க்க முடிந்தது என்னால். அதிகாரத்திலே இருந்துக் கொண்டு தவறு செய்பவர்களை என்னைப் போலவே எதிர்கிறாள் என்று எனக்குப் பெருமையாக இருந்தது. அந்த நேரத்தில் கூட என் முகம் புன்னகைத்தது.

அந்த இன்ஸ்பெக்டர், தன் சக போலிஸ்காரரிடம், என் பேத்தியை ரீமேண்ட் செய்ய ஏற்பாடு செய்யுமாறும், பிரஸ்ஸை வரச் சொல்லுமாறு ஆணையிட்டான்.

நான், “முடிஞ்சா. ரீமெண்டு பண்ணிப்பார் டா” என்று அந்த இன்ஸ்பெக்டரைப் பார்த்து சவால் விட்டேன்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த பேண்ட்-சர்ட்காரன் இன்ஸ்பெக்டரைப் பார்த்தான். இருவரும் எதிர்பார்த்தது நடக்காததால் கடும் கோபத்தில் இருந்தனர். அந்த இன்ஸ்பெக்டர் மீண்டும் என்னை அடிக்க கை ஓங்கினான்.

அப்போது சட்டென்று, அர்ஜுன் மேத்தாவும், அருண் மேத்தாவும் வந்து சேர்ந்தனர். அவர்கள் வந்த சில நிமிடங்களில் சுனில் குப்தாவும், ஒரு வக்கீலும் அந்த இன்ஸ்பெக்டர் அறைக்குள் வந்தனர்.

அந்த பேண்ட்-சர்ட்காரனும், இன்ஸ்பெக்டரும் அதிர்ச்சியில் உறைந்துப் போய் இருந்தனர்.

*************

மீண்டும் தாத்தாவை அடிக்க அந்த இன்ஸ்பெக்டர் கையை ஓங்கினான்.

அப்போது, அந்த அறையின் கதவைத் திறந்துக்கொண்டு, அர்ஜூன் மேத்தா அங்கிளும், அவரது மகனும் உள்ளே நுழைந்தனர்.

என்னையறியாமல், அர்ஜூன் மேத்தா அங்கிளைக் கட்டிப் பிடித்தேன். கண்ணீர் பெருக்கொடுக்க, அவரிடமும், அஸிஸ்டெண்ட் கமிஷ்னரான அவரது மகனிடம் நேற்று நடந்த சம்பவத்தை முழுவதுமாக விவரித்தேன். நான் சொல்வதைப் பொறுமையாக கேட்டுக்கொண்டனர்.

நான் விவரமாக நடந்தவற்றை சொல்லிக்கொண்டிருந்தப் பொழுது, சுனில் மாமாவும் வக்கீலும் வந்து சேர்ந்தனர். அவர்களும் நான் சொன்னதை முழுமையாக உள்வாங்கிக் கொண்டார்கள். தவறு என் மேலில்லை என்று நான் சொல்லச் சொல்ல அவர்களுக்குப் புரிய ஆரம்பித்தது.

இதையெல்லாம் பார்த்து, இன்ஸ்பெக்டரும், அந்த எச்.ஆரும்., அதிர்ச்சியில் உறைந்தேவிட்டனர். செய்வதறியாமல் திகைத்தனர்.

அருண் மேத்தா நேராக இன்ஸ்பெக்டரிடன் சென்றார். என்ன ஏது என்று விசாரித்தார். அருகில் சேரில் நின்றிருந்த அந்த எச்.ஆரும் ஏதோ விளக்கம் கொடுத்தான்.

பேசிக்கொண்டிருக்கும் பொழுதே, அந்த எச்.ஆரை லெப்ட் அண்ட் ரைட் வாங்கினார். சற்றும் எதிர்பாராத தருணத்தில் அந்த இன்ஸ்பெக்கரை அறைந்தார் அருண் மேத்தா.

வாழ்க்கையில் ஒரு போலிஸ் அதிகாரி, இன்னொரு போலிஸ் அதிகாரியை அடிப்பதை அன்று தான் முதன் முதலில் பார்த்தேன். அந்த இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்து, துறை ரீதியான விசாரனைக்கு உத்தரவிட சொல்லியிருப்பதாகச் சொன்னார் அருண் மேத்தா.

“நீ தாத்தாவ கூட்டிக்கிட்டு வீட்டுக்குப் போமா” என்றார் சுனில் மாமா.

அவர் டிரைவரை அழைத்து, என்னையும் தாத்தாவையும் வீட்டில் விட்டுவிட்டு வருமாறு ஆணையிட்டார் சுனில் மாமா. நாங்கள் கேபில் போயிக்கிறோம் என்று எவ்வளவோ சொல்லியும் அவர் விடவில்லை.

நானும் தாத்தாவும் பின் சீட்டில் அமர்ந்துக்கொண்டோம். சோபனா முன் சீட்டில் அமர்ந்துக்கொண்டாள். வண்டி நேராக மலாட் பகுதிக்குச் சென்றது.

நான் தாத்தாவின் தோளில் சாய்ந்துக்கொண்டேன். என் கண்களில் பெருக்கெடுத்தது. தாத்தாவின் கண்களிலும் கண்ணீர். வீடு சென்று சேரும் வரை நாங்கள் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

நாற்பத்தொன்றாவது பகுதியின் லிங்க்…

எழுத்து – பட்டிக்காடு