Saturday, April 20, 2024
Home > ஒண்ணுமில்ல > ஒண்ணுமில்ல… பகுதி 22

ஒண்ணுமில்ல… பகுதி 22

இருபத்தி ஒன்றாவது பகுதியின் லிங்க்…

அவள் கண்கள் என் கண்களைப் பார்க்கும் போது எனக்கு ஜீவ் என்று இருந்தது.

நான் மெய் மறந்து நின்றேன்.

ஆனால், அவள் அவளது பையைக் கொண்டு என்னை அடிக்க ஆரம்பித்துவிட்டாள். எனக்கு தூக்கி வாரிப் போட்டது. அவளை பெயரைச் சொல்லி அவளைக் கூப்பிட்டது, அவ்வளவுப் பெரிய தவறா என நான் நினைப்பதற்குள், என்னை ஹிந்தியில் திட்டிக்கொண்டே அடிக்க ஆரம்பித்தாள்.

அவளின் வலதுக் கால் செருப்பை கழற்றினாள். அதனைக் கொண்டு என் தலையில்  அடிக்க ஆரம்பித்தாள். நான் என் கையை வைத்து தடுக்க முயன்றேன். ஆனால், அவள் கோபம் குறையாமல் அடித்துக் கொண்டேயிருந்தாள்.

அடி வாங்குவதைத் தவிர எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இவள் ஏன் நம்மை அடிக்கிறாள் என்றும் எனக்குப் புரியவில்லை. ஒரே குழப்பமாக இருநதது. அவள் என்னை அடிக்கும் வேகம் அதிகமானது. நான் என் இரு கைகளையும் கொண்டு என் முகத்தை மூடிக்கொண்டேன். அவள் செருப்பால் ஓங்கி அடித்ததில், அவள் செருப்பின் ஹீல்ஸ் பட்டு எனது இடது மணிக்கட்டுப் பகுதியில் வலிக்க ஆரம்பித்தது. அதனால், சற்றே இடதுக் கையை மட்டும் இறங்கினேன்.

அவள், அந்த நிமிடத்தில் ஓங்கி அடித்த அடியில், அவள் செருப்பின் ஹீல்ஸ் முனை என் இடது புருவத்தின் மேல் பகுதியை கிழித்தது. இரத்தம் வரத் தொடங்கியது. அந்த இரத்தம் அவள் முகத்திலும் பட்டது. அதன் பிறகே என்னை அடிப்பதை அவள் நிறுத்தினாள்.

“கியா. லடுக்கி….” என்று ஆரம்பித்து மீண்டும் என்னை ஹிந்தியில் திட்ட ஆரம்பித்தாள். எனக்குப் புரியாத மொழியில் கேள்விகளை அடுக்கினாள். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

மீண்டும் என்னை அடிக்க கை ஓங்கினாள்.

“ஒண்ணுமில்ல. ஒண்ணுமில்ல. சாரி. சாரி” என்று சொன்னேன் அவளைப் பார்த்து.

ஓங்கிய கை இறங்கியது.

அவளுக்குத் தமிழ் தெரியுமா என்றுக் கூட தெரியாது. நான் ஒண்ணுமில்ல என்று சொன்னது அவளுக்கு புரிந்ததா என்றுக் கூடத் தெரியாது. ஆனால் என்ன புரிந்துக்கொண்டாளே, என்னை அடிப்பதையும், திட்டுவதையும் நிறுத்திவிட்டு அவள் கண்களில் கண்ணீருடன் அந்த இடத்தை விட்டு கிளம்பினாள்.

அடி வாங்கியது நான். லாஜிக் படி நான் தான் வலியால் அழ வேண்டும். அதுவும் தலையில் அடிப்பட்டு இரத்தம் வேறு வந்துக்கொண்டிருக்கிறது. ஆனால், என்னைப் இவள் பேயைப் போல அடித்து துவைத்துவிட்டு, இவள் ஏன் அழுகிறாள் என்று, அவள் மீது எனக்கு பரிதாபம் தான் வந்தது.

என் தலையை உயர்த்தி அவளை எட்டிப் பார்த்தேன். வேகமாக கிளம்பியவள், இரயில் நிலையத்தைவிட்டு வெளியேறிவிட்டிருந்தாள்.

என் முதுகை, நடைமேடையின் சுவரின் மீது சாய்ந்தவாறு, நான் படியில் அமர்ந்துக் கொண்டேன். என் கர்சீப்பை எடுத்து என் தலையில் கட்டினேன். என் இடது கை மணிக்கட்டு பயங்கரமாக வலிக்க ஆரம்பித்தது. சில நிமிடங்கள் அங்கேயே அமர்ந்திருந்தேன். அடுத்து என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை.

எனக்கு அவமானமாக இருந்தது. நல்ல வேளை நான் அடிவாங்கிய நடைமேடைப் பகுதியில் எந்த சிசிடிவியும் கிடையாது. அந்த மதிய வேளையில் கோரேகான் இரயில் நிலையத்தில் பெரிதாக ஆள் நடமாட்டமில்லை என்பதால், நான் அடி வாங்கியதை யாரும் பார்க்கவில்லை. யாராவது பார்த்திருந்தால், எனக்கு அது, இன்னும் பெருத்த அவமானமாகப் போயிருக்கும்.

எந்த ஒரு ஆணிற்கும், ஒரு பெண்ணிடம், பொது இடத்தில் செருப்பால் அடிவாங்குவது என்பது பெரும் அவமானம். நான் மட்டும் என்ன விதிவிலக்கா? என்னப் பொறுத்தவரை ஆண் பெண்ணை அடிப்பதோ, பெண் ஆணை அடிப்பதோ, இரண்டுமே குற்றம் என்பேன். இந்த உலகில் யாரும் யாரையும் அடிக்கும் உரிமைக்கிடையாது.

ஆனால், நம் நாட்டில் தான் இது மாதிரி நல்ல கருத்துக்களைச் சொன்னால், ஆன்டி-இந்தியன் என முத்திரைக்குத்த பெரும் பாக்தாள் படையே காத்திருக்கிறதே.

நான் என் போனை எடுத்து என் கைடு தாஸிற்கு போன் அடித்து, நான் ஒரு சிக்கலில் இருக்கிறேன்.  கோரேகான் இரயில் நிலையத்திற்கு எவ்வளவு சீக்கிரமாக வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வருமாறு கேட்டுக்கொண்டேன்.

நான் ஒரு பெண்ணிடம் அடி வாங்கியதை யாரிடமும் சொல்லப் போவதில்லை. அவள் பெயர் தேவி, ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் வேளை செய்கிறாள் என்பதைத் தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாது. நான் என்ன தவறு செய்தேன், ஏன் என்னை அவள் அடித்தாள் என்று எனக்குள் விடைத் தெரியாத கேள்வி எழுந்தது. அவளைப் பற்றி தெரிந்துக்கொள்ள ஆர்வம் அதிகமானது.

(அவ செருப்பால அடிச்ச அப்புறமும் அவள பத்தி தெரிஞ்சுக்கனும் நினைக்கிறானே என்று நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது. வேறு வழியில்ல. அவன் அவளைத் தேடிப் போகத் தான் போறான்.)

நான் போன் அடித்த அரை மணி நேரத்தில் என் கைடு தாஸ் வந்து சேர்ந்தார்.

வந்தவர்.

இருபத்தி முன்றாவது பகுதியின் லிங்க்…

– மீண்டும் சந்திப்போம் நாளை இரவு 08.00 மணிக்கு…

எழுத்து – பட்டிக்காடு